சென்னை

சென்னை அரசு மருத்துவமனைகளில் ஒமிக்ரான் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 275 தனிமைப் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

 

உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது.   தற்போது அது உலகின் பிறநாடுகளிலும் பரவி வருவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.   ஒமிக்ரான் வைரஸ் வழக்கமான கொரோனாவை விட 5 மடங்கு வேகமாகப் பரவும் எனவும் அதிக வீரியம் உள்ளதாகவும் கருதப்படுகிறது.   கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தமிழகத்தில் இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.   எனவே வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்துத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமிக்ரானை எதிர்கொள்ளத் தேவையாக இருக்கும் முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் வசதிகள், முகக்கவசங்கள் போன்றவை அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான அளவு கையிருப்பு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவினால் அதனை எதிர்கொள்ள பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.  ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 150 படுக்கைகள் ஒதுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4வது தளத்தில் முதற்கட்டமாக 150 படுக்கைகள் தயார் செய்து ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 75 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 15 ஐ.சி.யூ படுக்கைகள், 35 பொது படுக்கைகள் என மொத்தமாக 275 படுக்கைகள் ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கிண்டி கொரோனா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் பல கொரோனா படுக்கைகள் காளியாகக் இருப்பதால், தேவைப்படும் நேரத்தில் அவற்றை ஒமிக்ரான் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட உள்ளது.