சென்னை: ஜனவரி 26ந்தேதி  குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை உள்பட மாநில முழுவதும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்ப நடைபெறுவதையொட்டி, 5 அடுக்க பாதுபாப்பு போடப்பட்டு உள்ளதுடன், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

26 ஜனவரி இந்தியாவின் 74-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் இந்திய ஜனாதிபதிக்கு முன் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தின அணிவகுப்புகளை பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. இந்த குடியரசு தின விழா நாளில், ராஜ்பாத்தில் சடங்கு அணிவகுப்புகள் நடைபெறுகின்றன, சடங்கு அணிவகுப்புகள் இந்தியாவுக்கு அஞ்சலி செலுத்துகின்றன. இந்த அணிவகுப்புகள் இந்தியாவின் பாதுகாப்பு திறன், கலாச்சார மற்றும் சமூக பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இந்திய ராணுவத்தின் கடற்படை மற்றும் விமானப்படை மற்றும் 9 – 12 வெவ்வேறு படைப்பிரிவுகள் தங்கள் இசைக்குழுக்களுடன் அணிவகுத்துச் செல்லும். இந்திய ஜனாதிபதி இந்திய தலைமை தளபதி ஆயுதப்படைகளின் சல்யூட் ஏற்று கொள்கிறார். இந்தியாவின் பல்வேறு துணை ராணுவப் படைகள் மற்றும் போலீஸ் படைகளின் 12 குழுக்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் வேற்றுமையில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றன. ராஷ்டிரபதி பவனின் வாசலில் இருந்து தொடங்கி (ஜனாதிபதியின் இல்லம்), ரைசினா மலை, இந்தியா கேட் கடந்து ராஜ்பாத்தில், இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அன்றைய தினம் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும்.

குடியரசு தினவிழாவையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையங்கள், நாட்டின் எல்லைகள், மக்கள் கூடும் பகுதிகளில், ரயில் நிலையங்கள் என பல பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பல இடங்களில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் முக்கியமான இடங்களில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும்,  அன்றைய தினம், சென்னையில்,  தமிழ்நாடு கவர்னர்  ஆர்.என்.ரவி, சென்னை, காமராஜர் சாலை-வாலஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசியக் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற உள்ளது.

இதனையொட்டி சென்னை காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் திரு.T.S.அன்பு(வடக்கு), பிரேம் ஆனந்த சின்கா(தெற்கு), கபில்குமார் சி சரத்கர் (போக்குவரத்து) ஆகியோரின் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 6,800 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட சென்னை விமானநிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவு பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான மீனம்பாக்கம் விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்கள் உட்பட அனைத்து முக்கிய இடங்களிலும், சென்னை பாதுகாப்பு பிரிவின்(SCP), காவல் அதிகாரிகள் தலைமையில், காவல் ஆளிநர்கள், வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழத்தல் பிரிவு (BDDS), மோப்பநாய் பிரிவு மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் கடலோர பாதுகாப்பு படை (CSG) பிரிவினருடன் இணைந்து நாசவேலை தடுப்பு சோதனைகளும் (Anti Sabotage Check) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு 25.01.2023 மற்றும் 26.01.2023 ஆகிய 2 நாட்கள் சென்னையில் டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகின்றது.

சென்னை பெருநகர காவல் துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: உழைப்பாளர் சிலை அருகே 26ந்தேதி கொடியேற்றுகிறார் கவர்னர் ரவி…