சென்னை:  உக்ரைனில் தமிழகத்தை சேர்ந்த 2223 பேர் சிக்கியுள்ளனர். அவர்களை விரைந்து மீட்க மத்தியஅரசை தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது.

உக்ரைன் நாடு மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று 6வது நாளாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. விரைவில் அணுஆயுத தாக்குதல் நடத்தப்பட லாம் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக உக்ரைன் தலைநகர் கிவ்-வில் இருந்து இந்தியர்கள் இன்றே வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவித்து உள்ளது.

உகரைனில்,  வான்வழி மூடப்பட்டிருப்பதையடுத்து, அதன் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா, போலாந்து, சுலோவாகியா ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளில் இந்தியத் தூதரகம் சோதனை முகாம்களை அமைத்து, அந்த முகாம்களுக்கு சாலை மார்க்கமாக வருமாறு இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவ்வாறு வரும்போது, இந்திய தேசியக் கொடியை பேருந்துகளில் ஒட்ட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய தூதரகத்தின் அனுமதியோ அல்லது உள்நாட்டு அனுமதியோ இல்லாமல், வாடகைப் பேருந்துகள் மூலம் பத்து மணி நேரம், 12 மணி நேரம் பயணித்து இந்திய மாணவ, மாணவியர் உக்ரைன் நாட்டு எல்லைக்கு செல்வதாகவும், இது மிகவும் ஆபத்தானது என்றும், இருந்தாலும் வேறுவழியின்றி அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

போர் நடைபெறுகின்ற நாட்டில் இவ்வாறு பத்து மணி நேரம், 12 மணி நேரம் சாலையில் பயணிக்கும்போது, நடுவில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாகிவிடும். அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். ஏற்கனவே போர்களுக்கு இடையே ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று மத்தியஅரசை தமிழகஅரசு வலியுறுத்தி உள்ளது. உக்ரைனில் தமிழகத்தை சேர்ந்த 2223 பேர் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் அங்கு அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் தலைநகர் கீவ் மற்றும் க்ஹர்கிவ் ஆகிய நகரங்களில்  சிக்கி இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அவர்கள் விரைந்து மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.