நாகை: நாகப்பட்டினத்தில் நிதிநிறுவனம் நடத்தி சுமார் ரூ.220 கோடி மோசடி  செய்த விவகாரத்தில் நிதிநிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் கைது  செய்யப்பட்டு உள்ளனர்.

நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.

மேலும், நாகையின் பழமைவாய்ந்த நம்பகத்திற்குறிய நிறுவனம் என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் இன்று நிதி நிறுவனத்தின் வாசலில், நீலா தெற்கு வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்றது.

பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த நிதி நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் ஊழியர்களிடம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பஞ்சாயத்து பேசிய காவல்துறை, குறித்த நேரத்தில் கிடைக்கும் என நிதி நிறுவன உரிமையாளர் ரவி நம்பிக்கை தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

ஆனால், 6 மாதங்களை கடந்தும் இன்னும்  வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மீண்டும் காவல்துறையில் முறையிட்டனர்.

இதையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்,   ரூ.220 கோடி  அளவில் பொதுமக்களிடம் இருந்து வசூலித்து மோசடி செய்துள்ளதாக சுமார், 7 மாதங்களுக்கு பிறகு, அந் தநிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 நாகை குற்றப்பிரிவு போலீசார் எஸ்பி அலுவலகத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் ரவியிடம் கடந்த 2 நாட்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் 3000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கட்டிய வைப்புதொகை, சீட்டு தொகை, சேமிப்பு கணக்கு தொகை சுமார் 220 கோடி ரூபாய் திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தனியார் நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் அவருடைய மகன்கள் பாலாஜி, சிவா, செந்தில் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் 4 பேரும் நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.