சேலத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிட்ட திமுகவை சேர்ந்த 22 வயதான பிரித்தி மோகன் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91,975 பதவிகளை நிரப்புவதற்காக இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 27ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 76.19 % வாக்குகளும், டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகின. இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்டம் அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தின் 3வது வார்டு கவுன்சிலர் பொறுப்புக்கு திமுக சார்பில் பிரித்தி, இதர கட்சிகள் சார்பில் லலிதா, பூங்கோதை, ஜெயச்சித்ரா உட்பட மொத்தம் 5 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதில் திமுக வேட்பாளரான பிரித்தி மோகன், 2,203 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

22 வயதான பிரித்தி மோகன், எம்.ஏ முதுகலை முதலாமாண்டு படிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.