சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) கடலோர ஒழுங்குமுறை மண்டல (Coastal Regulation Zone – CRZ) விதிகளுக்கு முரணாக கடற்கரையை நோக்கி கட்டப்பட்டுள்ள 22 கட்டிடங்கள் இடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

CRZ III இன் வளர்ச்சி தடைசெய்யப்பட்ட மண்டலத்தில் (NDZ) அமைந்துள்ள கடற்கரையை நோக்கிய இந்த 22 கட்டிடங்களில் சில கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றவை இன்னும் கட்டுமானத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் அலையின் உயரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ள 200 மீட்டருக்குள் நிரந்தர கட்டமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், CRZ விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அடையாளப்படுத்தியுள்ளது.

ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் குறைந்தது ஆறு கட்டிடங்கள் கட்டுமானத்தில் இருப்பது ஆய்வின் போது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முட்டுக்காட்டில் உள்ள உடையக்கூடிய கடற்கரைப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களில் சில உயர்தர, முடிக்கப்பட்ட கட்டிடங்கள், சில இரண்டு தளங்களைக் கொண்டவை என்று கூறப்படுகிறது.

வருவாய் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் அடங்கிய குழுவைக் கொண்டு ஜிபிஎஸ் மூலம் ஆய்வுகளை மேற்கொண்ட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இந்த ஆய்வு விவரங்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) சமர்ப்பித்துள்ளதாகவும், மேலும் இதன் மீது நடவடிக்கை எடுக்க இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNSCZMA) சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.