இரு கழகங்களுமே தேர்தலில் சினிமாக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்தி ‘பயாஸ்கோப்’ காட்ட தவறுவதில்லை.
எம்.ஜி.ஆரில். ஆரம்பித்தால் இந்த பட்டியல் எஸ்.எஸ்.ஆர், ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா, சரத்குமார், ராமராஜன், டி.ராஜேந்தர், வாகை சந்திரசேகர், ராதாரவி, எஸ்.வி.சேகர், ராம.நாராயணன் என அனுமார் வால் போல் நீளும்.
நெப்போலியன்- மத்திய அமைச்சராகவே ஆக்கப்பட்டார்.
சரத்குமார், சந்திரசேகர், டி.ராஜேந்தர் ஆகியோரை இரு ரகங்களில் சேர்க்கலாம். இவர்கள் ஜெயிக்கவும் செய்தார்கள்.தோற்றுப்போனதும் உண்டு.
சினிமாவில் இருந்து வந்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில்- நேற்று வெளியிடப்பட்ட திராவிட கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் சினிமாக்காரர்கள் பெயரும் இல்லை.
சரத்குமார், சீமான், ராஜேந்தர், கவுதமன் வகையறாக்கள் தனித்து களம் காணலாம்.
ஆரோக்கியமான விஷயமாக எழுத்தாளர்கள் சிலர் இந்த தேர்தலில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், ரவிக்குமார், வெங்கடேசன் ஆகியோர் தான் அவர்கள்.
நால்வருமே அரசியல் வாதிகள் என்றாலும்- எழுத்தும் அவர்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறது.
கனிமொழி ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக பதவி வகித்துள்ளார். முதன் முறையாக மக்களவைக்கு போட்டியிடுகிறார்.
தமிழச்சி தங்கபாண்டியன்- கல்லூரி ஆங்கில பேராசிரியராக இருந்தவர். சிறந்த கவிஞரும் கூட.முதன் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.
-பாப்பாங்குளம் பாரதி