சென்னை

சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் மற்றும்  விஸ்வபிரியா நிதி நிறுவன அதிபர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அடையாறு காந்தி நகரில், செயல்பட்டு வந்த ‘விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக அறிவித்தது. ஏராளமானோர் இதை நம்பி, முதலீடு செய்தனர். அந்த நிறுவனம் சொன்னபடி வட்டி வழங்கவில்லை. முதலீடுகளைப் பெற்று மோசடி செய்தது.

வேளச்சேரியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர், போலீசில் கடந்த 2013-ம் ஆண்டு புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கில், நிதி நிறுவனம் மற்றும் அதன் 17 துணை நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் சுபிக்ஷா சுப்பிரமணியன், ஸ்ரீ வித்யா, நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த 2020 அக்டோபர் மாதம் இந்த வழக்கின் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ‘587 முதலீட்டாளர்கள் புகார்களின்படி, 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட வைப்பீடுகள் வாயிலாக, பல கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது’ என கூறப்பட்டிருந்தது. வழக்கு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் இறந்துவிட்டனர். தலைமறைவான இயக்குநர் அப்பாத்துரையை, தேடப்படும் நபராகச் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விசாரணையின்போது, அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞர்கள் டி.பாபு, எம்.இ.வி.துளசி ஆகியோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.கருணாநிதி, இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தார்.

தீர்ப்பில்,

”இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். இயக்குநர் ஸ்ரீ வித்யாவுக்கு 4 ஆண்டுகளும், மற்ற இயக்குநர்கள், ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்களுக்கு மொத்தம் 191 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். இந்த தொகையில், ரூ.180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும். இயக்குநர்கள் ராகவன், மோகன் ராமசாமி ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேர் இறந்து விட்டதால், அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுகிறது.” 

என்று நீதிபதி கூறியுள்ளார்.