மதுரை: மதுரையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் ஏற்கனவே பலியாகி இருக்கிறார். இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய மதுரை நரிமேடு, தபால்தந்தி நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அந்த பகுதிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன.

மேலும் அங்கிருந்து யாரும் வெளியேறவும், உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் சுகாதாரத்துறை மூலமாக கொரோனா இருக்கிறதா என்று சோதனை நடத்தப்படுகிறது.

வரும் 4 நாட்களுக்கு அங்கிருந்து யாரும் வெளியேற தடை விதிக்கப்பட்டது. மேலும், மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளையும் அடைக்கவும் உத்தரவிடப்பட்டது. கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக தெரிவிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு வீடுகளுக்கு சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர்.