கோழிக்கோடு

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒரு பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்

சென்னை நகரிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்குப் பயணிகள் பேருந்து இயங்குகிறது. இன்று சென்னையிலிருந்து கோழிக்கோடு நோக்கி 40 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் திருவாழியோடு பகுதியில் செங்குத்தான சாலையில் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம்  இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

பயணிகள் விபத்தில் சிக்கி பீதியில் அலறினர்.  விபத்து குறித்துத் தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவ மனைகளுக்கு அனுப்பி          வைக்கப்பட்டுள்ளனர்.  காவல்துறையினர் இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.