சென்னை: மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பம் செய்த மாணவிகள், அதில் திருத்தம் செய்ய 2நாள் அவகாசம் வழங்கி தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வி யான பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு ஆகியவை படிக்கும் வகையில்  மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த கல்வி  உதவித் தொகை மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்து இருந்தது.

அதைத்தொடர்ந்து அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், சுமார் 2.8 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில்,  கல்லூரி பயிலும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

விண்ணப்பங்கள் பரிசீலனைக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இரண்டு நாட்கள் அவகாசம் அளித்து, அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.