ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர் வினியோகம் செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்றது.  அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்கள். திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் அங்கே முகாமிட்டு வாக்கு வேட்டையாடி வருகின்றனர். இதற்கிடையில், அங்கு பொதுமக்களை அடைத்து வைத்து இருப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல பகுதிகளில்  வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன.

ஆனால், அதை விசாரித்து வருவதாக கூறும் தேர்தல் ஆணையம் அதுதொடர்பாக எந்தவொரு வழக்கு பதிவும் செய்யவில்லை. மேலும் தேர்தலை நிறுத்தக்கோரி யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தது. இதையடுத்து, தேமுதிக தரப்பில் நேற்று , தேர்தலை நிறுத்தக்கோரி புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர் மற்றும் இலவச பொருட்கள் வழங்குவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடி வருகின்றனர்.

இதையடுத்து,  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் திமுக கூட்டணி கட்சியினர் வாக்காளர்களுக்கு குக்கர் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறும்போது, ”குக்கர் வினியோகம் செய்ததாக வந்த தகவலை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி 2 இடங்களில் குக்கர் வினியோகம் செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றார்.