சென்னை:

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் பற்றிய வழக்கில் முதல்வர் தரப்பு வாதமும்,  எழுத்துப்பூர்வ மான வாதங்களும் தாக்கல் செய்துள்ள நிலையில், தீர்ப்பை ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

டி.டி.வி தினகரனை ஆதரித்து 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த 10ந்தேதி முடிவடைந்த நிலையில், எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய  தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு உத்தரவிட்டது.

அதன்படி இன்று இந்த வழக்கில் அனைத்து தரப்பினர் சார்பாக எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

 

ஜெ.மறைவை தொடர்ந்து இரண்டாக பிரிந்த அதிமுக, பின்னர் ஓபிஎஸ்-ன் நிபந்தனைகளை ஏற்று ஒன்றானது. அதையடுத்து, சசிகலா தரப்பினர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர்.

இதன் காரணமாக சசிகலாவால் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள், எடப்பாடிக்கு எதிராக அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவிடம்  கடிதம் கொடுத்தனர்.

இது கட்சி கொறடாவின்  உத்தரவை மீறிய செயல் என்று, அவர்களை கட்சி கொறடா அறிவுறுத்தலின் பேரில், கடிதம் கொடுத்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர்  உத்தரவு வழங்கினார்.

இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல்  விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், ஜனவரி 22ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சபாநாயகர், முதல்வர், கவர்னர், கட்சி கொறடா  மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

அதையடுத்து, தீர்ப்பை ஒத்தி வைப்பதாக  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதலாவது அமர்வு அறிவித்து உள்ளது.