சென்னை:
சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், இந்தியப் பெருங்கடலில் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலை இந்தியாவின் கடலோரப்பகுதிகளில் கோரத் தாண்டவமாடியது.

இந்தோனேசியா, இந்தியா மட்டுமல்லாது மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோரப் பகுதிகளையும் தாக்கி, அங்கிருந்த மக்களை வாரிச் சுருட்டியது சுனாமி. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

சுனாமியால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பகுதிகள் கடுமையான சேதங்களைச் சந்தித்தன.

இன்று சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தங்கள் சொந்தங்களை சுனாமியால் இழந்த மக்கள், கடற்கரைக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.