ராமேஸ்வரம்: 16 மீனவர்கள் கைது எதிரொலியால் கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் படகுகளும் நாசமாகி வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கான முடிவு எட்டப்படவில்லை.

இந்த நிலையில், நேற்றும் ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இருந்து சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள்  மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நிலையில்,நெடுந்தீவு அருகே ஒரு விசைப்படகில் மீனவர்கள் மீன்படித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அதுபோல, தலைமன்னார் அருகே மற்றொரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.  மொத்தம் 16 மீனவர்களையும்,  இரண்டு விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை  தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, 16  மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.