சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும்  மே 5ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கு, நாடு முழுவதும் இருந்து சுமார்  24 லட்சம் மாணவர்கள்  விண்ணப்பம் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு ஆண்டுக்கு ஆண்டு வரவேற்பு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு ஆண்டு  1,55,216 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 7,635  அதிகம்.

நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (சுருக்கமாக நீட் தேர்வு) என அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வை, என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.

அதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.. அந்த வகையில் நடப்பாண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு, மே 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET UG தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்கள் இருக்கும். ஒவ்வொரு பாடத்திலும் 50 பல தேர்வு கேள்விகள் இரண்டு பிரிவுகளாக (A மற்றும் B) பிரிக்கப்படும். தேர்வின் காலம் மதியம் 2:00 முதல் மாலை 5:20 வரை அதாவத 200 நிமிடங்கள் இருக்கும். இத்தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும், மேலும் இது ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நீட் தேர்வு நடத்தப்படும்..

மதிப்பெண் திட்டத்தின்படி, ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்களும், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மூன்று மதிப்பெண்களும் கழிக்கப்படும். பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு பூஜ்ஜிய மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பங்கள் சரியாக இருந்தால், இரண்டு விருப்பங்களுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கடந்த 2023ம் ஆண்டு நீட் தேர்வு 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இது முந்தைய 2021ம்  ஆண்டை விட 2.57 லட்சத்திற்கும் அதிகமாகும். குறிப்பாக இந்த ஆண்டு, மொத்தம், 11.8 லட்சம் பெண் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். ஆண் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை விட இது 2.8 லட்சம் அதிகமாகும். நீட் இளங்கலை தேர்வுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

ந்த நிலையில், நடப்பாண்டு (2024) நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து,. 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகபட்ச விண்ணப்பம் உ.பி.யில் பதிவாகி உள்ளது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 16-ம் தேதியுடன் முடிவு பெற்றது. இதற்கு நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில்,   மாணவர்கள் 10 லட்சத்து 18,593 பேரும், மாணவிகள் 13 லட்சத்து 63,216 பேரும் உள்ளனர். மாற்றுப் பாலின மாணவர்கள் 24 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மாநிலங்கள் வரிசையில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 3 லட்சத்து 39,125 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வை எழுதி 1,55,216 பேர் விண்ணப்பம்  செய்துள்ளனர். கடந்த ஆண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.

நாடு முழுவதும்  கடந்த 2022-ம் ஆண்டு நீட் தேர்வெழுத 18 லட்சத்து 72,343 பேரும், 2023-ம் ஆண்டில் 20 லட்சத்து 87,449 பேரும் தேர்வெழுத விண்ணப்பித்தனர். இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு, எண்ணிக்கை அதிகரித்து 23 லட்சத்து 81,833 மாணவர்கள் நீட் தேர்வுக்கு முன்பதிவு செய்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் முந்தைய ஆண்டைக் காட்டிலும், நீட் தேர்வெழுத அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கௌக்கு இன்று (மார்ச் 25) முதல், நீட் பயிற்சி கல்வி மாவட்ட அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் இரு வேளை உணவுடன், போக்குவரத்துக் கட்டணமும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.