சென்னை:  பரபரப்புக்கு இடையில் அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.இந்த  செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

செயற்குழுக் கூட்டத்துக்கு வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வரும்,  அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்த போதும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டுச் செயற்குழுக் கூட்டத்துக்குச் சென்றனர்.

அதிமுக செயற்குழுவில், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கும்,

நீட் தேர்வு முறையைக் கைவிட மத்திய அரசை வலியுறுத்தியும்,

கொரோனா தடுப்புப் பணிகள், நிவாரணப் பணிகள் ஆகியவற்றுக்குத் தேவையான நிதியைத் தமிழகத்துக்கு வழங்கவும்,

சரக்கு சேவை வரி வருவாயில் தமிழக அரசுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை,

பல்வேறு திட்டங்களுக்கான மானியத்தொகைகளை உடனடியாக வழங்கவும்.

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும்,

காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும்,

காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதலமைச்சருக்கு நன்றி,

இந்தியப் பண்பாட்டின் தோற்றம், வளர்ச்சி பற்றி மறு ஆய்வு செய்ய அமைத்துள்ள வரலாற்று அறிஞர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்கவும்,

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கவும், இலங்கைத் தமிழர் நலன் காக்கவும் மத்திய அரசை வலியுறுத்துதல் உள்பட   15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.