கோவை செல்வராஜ் முன்னாள் எம்.எல்.ஏ., ஆர். தர்மர் எம்.பி., ஆர். கோபாலகிருஷ்ணன் முன்னாள் எம்.பி., வி.என்.பி. வெங்கட்ராமன் முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 14 பேரை அதிமுக-வின் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமித்து ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒட்டி ஏற்பட்ட கைகலப்புக்குப் பின் ஓ.பி.எஸ். தலைமையில் ஒரு குழுவும் ஈ.பி.எஸ். தலைமையில் மற்றொரு குழுவும் செயல்பட்டு வருகிறது.

இந்த இரு குழுக்களும் அதிமுக நிர்வாகிகளை மாறி மாறி நீக்கி வருவதும் புதிய நிர்வாகிகளை நியமிப்பதும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ். இன்று வீடு திரும்பியதை அடுத்து அதிமுக-வின் புதிய மாவட்ட செயலாளர்களாக 14 பேரை நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, நேற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அதிமுக விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் கருத்துக்கூற விரும்பவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.