குடும்பத்தின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் 68 நாட்கள் கடும் விரதமிருந்த ஜெயின் சமயத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

radhana

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் லட்சுமிகாந்த் சன்சாதியா இவர் தங்க நகைக்கடை வைத்திருப்பவர். சமீபத்தில் இவரது தொழிலில் ஏற்ப்பட்ட கடும் நஷ்டத்தையடுத்து சென்னையை சேர்ந்த ஒரு ஜெயின் துறவியை சந்தித்து இந்த சிக்கலில் இருந்து விடுதலை பெற தனக்கு ஏதேனும் வழி சொல்லுமாறு அவரிடம் வேண்டியிருக்கிறார்.
அந்த ஜெயின் துறவி லட்சிமிகாந்தின் 13 வயது மகள் ஆராதனாவை “சத்துருமஸ்” என்ற 68 நாள் விரதத்தை கடைப்பிடிக்கும்படி ஆலோசனை சொல்லியிருக்கிறார். இதன்மூலம் தொழிலில் ஏற்பட்டிருக்கும் முடக்கம் நீங்கி பெருத்த லாபம் உண்டாகும் என்றும் ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
குடும்பத்தின் நலனுக்காக தியாகத்துடன் இந்த சிறுமி தனது விரதத்தை தொடங்கியிருக்கிறாள். விரதம் முடிவு பெறும் அக்டோபர் 3 ஆம் தேதியன்று தெலுங்கானாவின் அமைச்சர் ஒருவரை அழைத்து பெரிய விழாவுக்கும் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
ஆனால் ஆராதனா திடீரென்று மூர்ச்சையாகி விழவே அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அதற்குள் அவள் கோமா நிலைக்கு சென்றுவிட பரிசோதித்த மருத்துவர்கள் அவள் இறந்துவிட்டதாக அறிவித்திருக்கின்றனர். 68 நாட்கள் உணவின்மையால் அவளது குடல்கள் வரண்டு அவளது சிறுநீரகம் இரண்டு முற்றிலும் பழுதடைந்து விட்டிருக்கிறது.
இந்நிலையில் ஆராதனாவின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குழந்தைகள் உரிமை மையம் போலீசில் புகார் அளித்திருக்கிறது.