சென்னை:  இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள்  இன்று சென்னை திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.


தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதும், பின்னர் தமிழ்நாடு அரசு, இந்திய அரசு வலியுறுத்தியதும்  விடுதலை செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. தமிழக மீனவர்கள் கைதுக்கு, எல்லை தாண்டி வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது.  ஆனால், தமிழக மீனவர்கள், ஆழ்கடலில் ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும் என்பதால் தமிழக மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்வது வழக்கம். ஆனால்,  இதற்கு இலங்கை மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால்,  இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும் அது முடிவுக்கு வருவதாக இல்லை.

இந்த நிலையில்தான் கடந்த 2023ம் ஆண்டு,  கடந்த டிசம்பர் மாதம் கூட இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 45 மீனவர்கள் மற்றும் பிடித்து வைக்கப்பட்டுள்ள 138 மீன்பிடிப் படகுகளை விடுவித்திட தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில், மீனவர்கள் கைது குறித்து கவலைப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையிலான இது போன்ற செயல்களால் மீனவர்கள் அச்சப்படுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மத்தியஅரசு தரப்பில் இலங்கை அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடத்து,  ஜனவரி 5 ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவதாக இலங்கை நீதிமன்றம் தெரிவித்திருந்தது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.