ஜம்மு: புத்தாண்டு தரிசனத்துக்காக காஷ்மீரில் உள்ள பிரலமான மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு திரண்ட பக்தர்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என டிஜிபி தில்பர்சிங் தெரிவித்துள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் பிரலமான மாதா வைஷ்ணவ தேவி கோவில் உள்ளது.  புத்தாண்டு தரிசனதுக்காக  ஆண்டுதோறும் பக்தர்கள்  யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அதன்படி, நேற்று இரவும்  வைஷ்ணவி தேவி பவன் பகுதியருகே கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நெரில் அதிகரித்தது.  அதிகாலை 2.45 மணியளவில் இது முட்டல் மோதலாக நீடித்து, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். இதனால் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், பலர் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அங்கிருந்து செல்ல முற்பட்டனர். இதனால்  ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது நெரிசலில் கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு ஓடியதில் பலர் உயிரிழந்தது தெரிய வந்தது.  கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.  13 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். இந்த சம்பவம் பற்றி காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் மந்திரிகள் ஜிதேந்திரா சிங் மற்றும் நித்யானந்தராய் ஆகியோருடன் பேசியுள்ளேன்.  தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறியுள்ளேன் என்று தெரிவித்து உள்ளார்.