சென்னை:  கோடை விடுமூறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்போது, அரசு பள்ளிகளில் 100 சதவிகிதம் இணைதள வசதி ஏற்படுத்தப்பட்டு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும்  இருதுவரை  11,113 அரசு பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி  ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும்    எஞ்சியுள்ள பள்ளிகளில் விரைவில் இணைய வசதி  செய்து தரப்படும் என்றும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 24,291 தொடக்கப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு ஆசிரியர்களுக்கு டேப்லெட் எனப்படும் கையடக்க கணினியும் வழங்கப்பட இருக்கிறது.

உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் ஆசிரியர்களுக்கான கையடக்க கணினி பயன்பாடுகளுக்கு இணைய வசதி அவசியம் வேண்டும். ஆனால், எல்லா அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இணைய வசதிகள் இல்லை.

இதன் காரணமாக, இணைய வசதி இல்லாத பள்ளிகளில் அவ்வசதியைச் செய்து தருவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய வசதியை ஏற்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது, அனைத்து அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி இயங்கும் வகையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மே 2-ம் தேதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் உள்ள  8030 அரசு தொடக்கப் பள்ளிகள், 3083 அரசு நடுநிலைப் பள்ளிகள் என 11,113 அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

எஞ்சியுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 60 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் நிறைவடைந்துள்ளன. கோடை விடுமுறைக்குப் பிறகு, மீண்டும் திறக்கப் படும்போது அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுவிடும் என்று பள்ளிக்கல்வித் துறையினர் தெரிவித்தனர்.