லாஸ் ஏஞ்சல்ஸ்:
ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கார் விழா, அகாடமி நிகழ்ச்சிகளில் பங்கேற்க 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, ‘கிங் ரிச்சர்ட்’ என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை பற்றி நகைச்சுவையாக பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனைத்தொடர்ந்து நடிகர் வில் ஸ்மித், தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது செயலால் பெரும் சங்கடம் அடைந்திருப்பதாகவும் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் தற்போது Academy of Motion Picture Arts and Science அமைப்பின் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஸ்மித். கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவிருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித்திடம் ஆஸ்கர் அகாடமி அமைப்பு நேற்று விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையில் நகைச்சுவை நடிகரான கிறிஸ் ராக்கை அறைந்து மேடையின் நடுவில் அரங்கேறி உலகையே வியப்பில் ஆழ்த்திய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு வில் ஸ்மித் ஆஸ்கார் விழாவில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.