சென்னை: தமிழ்நாட்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு இழப்பு தொகையில் 10% வெகுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் வரிஏய்ப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதை தடுக்கும் நோக்கில்,   வரி ஏய்ப்பு குறித்து வணிகவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,  அதன்படி,அரசு வணிக வரித் துறையால் நிர்வகிக்கப்படும் அனைத்துச் சட்டங்களின் கீழ் தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதிகள் வழங்கும் திட்டமும்,தகவல் அளிப்பவர்களுக்கான வெகுமதிகளின் அளவும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஒரு தனிப்பட்ட அதிகாரிக்கான வெகுமதிகள் ரூ.1,00,000-க்கு மிகாமல் தரப்படும். அதே சமயம்,ஒரு அதிகாரி ரூ.10 லட்சம் வரை வெகுமதி பெற தகுதியுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிவிலக்கான சந்தர்ப்பங்களில்,ரூ.4,00,000/ வெகுமதியாக இருப்பின்,ஒரு தனிப்பட்ட அதிகாரி அல்லது குழுவிற்கு அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தரப்படும்.

அரசு ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் தகவல் தெரிவித்தால் வசூல் செய்யப்படும் ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட இழப்பு தொகையில் 10% வரை வெகுமதி தரப்படும். மேலும், இடைக்கால வெகுமதியாக 5% அல்லது ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, வணிக வரித்துறையில் வரி ஏய்ப்பினைத் தடுப்பதில் உதவுபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும். குறிப்பாக ,வரி ஏய்ப்பு செய்வோர் குறித்து வணிகவரித் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும் வரி ஏய்ப்பினைக் கண்டுபிடித்து சிறப்பாக வரி வசூல் செய்யும் வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் வெகுமதி வழங்கப்படும்,இதற்காக நடப்பு ஆண்டில் ரூ.156 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.