நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐசரி கணேசனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம் .

ஜூன் 22-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கூடாது என ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் நீதிபதியை அணுகியதாக கூறப்படுகிறது . இதனால் இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பதில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக மாநில சட்டப்பணிகள் ஆணைய குழு மூலமாக ரூ.10 லட்சம் பணத்தை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.