சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம்  உள்ஒதுக்கீடு அளித்து தமிழகஅரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அரசாணைக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதி மன்றம்  தமிழகஅரசு பதில்அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து தென்னாடு மக்கள் கட்சியின் நிறுவனரான கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு துவங்கியுள்ள நிலையில், அந்தக் கணக்கெடுப்பு முடியாமல் எப்படி இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என அந்த மனுவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

மேலும் 68 ஜாதிகளைச் சேர்த்து அவர்களுக்கு 7 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிவிட்டு, வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 22 ஜாதிகளுக்கு வெறும் 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  வன்னியர்களுக்கு 10.5 தனி உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்துள்ளதுடன், மனுதாரர் தரப்பில் போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று அறிவுறுத்தியதுடுன், இது தொடர்பாக  சென்னை  தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.