சத்துவாச்சாரி அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்வை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி ஜெகன் நகரை சேர்ந்தவர் ஜான்ரூஸ்கின். இவரது 2வது மகள் ஆலிவ்பிளசி சாரால். இவர் 10-ம் வகுப்பு பொதுதேர்வில் 492 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். இந்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதையடுத்து ஆலிவ்பிளசி சாரால், சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு சேர்ந்தார்.

காலை பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய அவர், தனது அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆலிவ்பிளசி சாரால் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

சத்துவாச்சாரி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.