சென்னை: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது, ஆனால், இந்த விவகாரத்தில்  பிரதமர் மோடி அமைதி காத்து வருகிறார் என மூத்த காங்கிரஸ் கட்சி தலைவரும், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சி தலைவருமான  மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்க சரிந்து வருகிறது. இதனால் பங்கு சந்தைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன.  கடந்த மே 5 ஆம் தேதி ஒரு டாலர் மதிப்பு ரூ. 76.90 ஆக இருந்த நிலையில் இன்று (திங்கள்) காலை வர்த்தகத்தில் ரூ. 77.42 ஆக அதிகரித்துள்ளது.  இதன் மூலமாக டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது.  இதுகுறித்து தொழிலதிபர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், காங்கிரஸ் மூத்தத்தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், “டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. பிரதமர் மோடி இப்போது முதல்வராக இருந்திருந்தால், மத்திய அரசை தேச விரோத அரசு என்று கடுமையாக சாடியிருப்பார். தற்போது பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.