சென்னை: ராகுல் காந்தி மேற்கொள்ள இருப்பது ஒற்றுமைக்கான யாத்திரை என அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமைக்கான யாத்திரையை செப்டம்பர் 7-ம் தேதி  குமரியில் தொடங்குகிகறார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மிகப்பெரிய பாதயாத்திரையான, இது சுமார் 3500 கிலோ மீட்டர் தூரமாகும். இதை  150 நாட்களில்  கடக்க ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ம் தேதி நடக்கிறது.

ராகுல்காந்தியின் பாரத் ஜோடா பாதயாத்திரை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான  திக்விஜய் சிங், அகில இந்திய காங்கிரஸின் தகவல் தொடர்புத்துறையின் தலைவரும் பொதுச்செயலாளருமான ஜெயராம் ரமேஷ் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில்  நடைபெற்றது.

இதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, சத்தியமூர்த்தி பவனில் டெல்லி மூத்த தலைவர்களுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த,  மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பா.ஜ.க. மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டை பிளவுபடுத்துவதற்கான யாத்திரை. ஆனால்,  ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரை, மக்களை ஒன்றுசேர்க்கும் யாத்திரை என தெரிவித்துள்ளார்.

பாஜ மேற்கொண்ட ரத யாத்திரை நாட்டை பிளவுபடுத்துவதற்கான யாத்திரையாகவே இருக்கிறது. ஆனால் ராகுல்காந்தியின் பாத யாத்திரை ஒற்றுமைக்கான யாத்திரையாகவும், மக்களை ஒன்று சேர்க்கும் யாத்திரையாகவே இருக்கும். அவரது நடைபயண நிகழ்ச்சியை ஒவ்வொரு நொடியும் நேரலையாக பார்ப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுலின் பாதயாத்திரையின்போது, ஒவ்வொரு நாளும் 23 கி.மீ., வீதம் நடைபயணம் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும் காலை 7மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரையும் வரை நடைபயணம் மேற்கொள்ளப்படும். இந்த நடை பயணத்தின் போது பல்வேறு தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர் என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘‘கன்னியாகுமரியில் வரும் 7ம்தேதி தொடங்கும் நடைபயணத்தின் போது, தொடக்கமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்துகிறார். தொடக்க நிகழ்ச்சியின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் ஒப்படைக்கிறார். அன்றைய தினம் மாலையில் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் உரையாற்றி விட்டு ராகுல்காந்தி தலைமையில் நடைபயணம் தொடங்குகிறது’’ என்றார்.