டில்லி:

முஸ்லீம் லீக்கிற்கு எதிராக யோகியின் ‘வைரஸ்’  டிவீட்ஸ் தடுக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தில் வயநாட்டில் கடந்த 4ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு  காங்கிரசின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பெரும் வரவேற்பு அளித்தது. அவர்களின் கட்சிக்கொடி  பாகிஸ்தான் கொடியைப்போல இருந்ததால், இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து,   டிவிட்டரில் பதிவிட்டிருந்த உ.பி. முதல்வர் யோகி, முஸ்லீம் லீக் கட்சி ஒரு வைரஸ். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது. இன்று நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசை அந்த வைரஸ் தாக்கியுள்ளது. இதனால்  எல்லா இடங்களிலும் பச்சை கொடிகள் முளைத்துள்ளது. ஜாக்கிரதை! என குறிப்பிட்டுள்ளார்.

யோகியின் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி குறித்த விமர்சனம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சை பேச்சு குறித்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது. டிவிட்டரில் இதனை தெரிவித்த அக்கட்சியின் பொது செயலர் பி கே குன்ஹாலிகுட்டி, நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் யோகியின் டிவிட், இந்திய தேர்தல் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று டிவிட்டர் நிர்வாகம் தடுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக  பாஜக தலைவர்கள் கிரிராஜ் சிங்,  அமித் மால்வியா, கோயனா மித்ரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.