சென்னை:
நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை:

நெல்லை கிழக்கு, மேற்கு, மத்திய ஆகிய மாவட்டங்கள், திமுக நிர்வாக வசதிக்காகவும், கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு என 4 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. திரு நெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், நாங்குனேரி, ராதாபுரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளும், திருநெல்வேலி மத்திய மாவட்டம் திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய 2 தொகுதிகளும், தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர் ஆகிய 2 தொகுதிகளும், தென்காசி தெற்கு மாவட்டம், சங்கரன்கோவில் (தனி) தென்காசி, ஆலங்குளம் ஆகிய 3 தொகுதிகளும் அடங்கும்.

மேலும் நெல்லை கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரா.ஆவுடையப்பன், திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் மு.அப்துல் வஹாப், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ.துரை.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.