சென்னை

நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புக்களை நேரில் பார்வையிட உள்ளார்.

கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் அம்மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு 141 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் டில்லியில் பிரதமர் மோடியை நேற்றிரவு சந்தித்த பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அவர் டில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை 10.30 மணியளவில் சென்னை திரும்புகிறார். பிறகு அவரது தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் 4 மாவட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இன்று இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து நாளை  தூத்துக்குடி மாவட்டம் சென்று அங்கு வெள்ள பாதிப்பு பகுதிகள், மீட்பு மற்றும் நிவாரண பணிகளைப் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார். முதல்வரின் பயணம் மத்தியக் குழு வருகையை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.