சென்னை: ஜூன் 23ந்தேதி முதல் ஜூலை 30ந்தேதிக்குள் 30 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அறிவுரை வழங்கியுள்ளார்.  அதன்படி, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் கோவில்கள் கீழ்க்கண்டவாறு வகை செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படுகின்றன.

கோவில்கள் மற்றும் கட்டிங்களின் கட்டுமானம், பழுதுபார்த்தல், பாதுகாத்தல், பேணிக்காத்தல், மீட்டெடுத்தல், மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் திருப்பணியில் அடங்குவனவாகும். வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் கொண்டு ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் போற்றிப் பாடப்பட்ட கோவில்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள கோவில்களின் திருப்பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 07.05.2021 முதல் 17.06.2022 வரை 208 கோவில்களில் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் ஜூன் 23-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையுள்ள வரும் காலத்தில் 30 கோவில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.