சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், படத்தின் முதல் பாடலை ரம்ஜானை முன்னிட்டு மே 14-ம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார் .

வெங்கட்பிரபுவின் தாயாரின் திடீர் மரணம் காரணமாக பாடல் வெளியீட்டை சில தினங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

‘மாநாடு’ திரைப்படத்தில் 2 நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. விமானத்தின் உள்பகுதியில் படமாக்க வேண்டிய இந்த காட்சிகளை ஓசூரில் படமாக்க திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இதற்கிடையே, எடிட்டிங், இசைக்கோர்ப்பு உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன. ஊரடங்கு முடிந்த பிறகு, அந்த 2 நாள் காட்சிகளை படமாக்கியதும் முழு படமும் தயாராகிவிடும் என்கிறது படக் குழு.