சிதம்பரம்:

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலியில் 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெறும். இந்த ஆண்டு  சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா நாளை  (4ந்தேதி) தொடங்குகிறது. முன்னதாக இன்று  கின்னஸ் உலக சாதனைக்காக 10 ஆயிரம் நடனக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்று நாட்டியமாடும் பிரம்மாண்ட நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில்  பத்தாயிரம் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, ஒரேநேரத்தில் நாட்டியமாடி நடராஜருக்கு அஞ்சலி செலுத்தும் விழா இன்று காலை தொடங்கியது. கின்னஸ் சாதனை முயற்சியாக நடை பெற்ற இந்த நாட்டியாஞ்சலியில், நாட்டியத்தில் தேர்ச்சி பெற்ற மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

நடராஜர் கோவிலில் உள்ள  ஆயிரங்கால் மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகாரத்தில் 10 ஆயிரம் பேரும் திரண்டு ஒரே நேரத்தில் நாட்டியமாடினர். 20 நிமிடங்களுக்கும் மேலாக நாட்டியாஞ்சலி நடைபெற்றது.

இதை பதிவு செய்வதற்காக லண்டனைச் சேர்ந்த கின்னஸ் குழுவினர் வந்திருந்தனர். விழா முடிவடைந்த பின்னர், கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவை விழாக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதனிடையே சிவராத்திரியை முன்னிட்டு நாளை தொடங்கி எட்டாம் தேதி வரை 5 நாட்கள் நாட்டி யாஞ்சலி விழா நடைபெறுகிறது. இதில் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்களது நாட்டியத்தை நடராஜருக்கு அர்ப்பணிக்கவுள்ளனர்.

விழா தொடக்க நாளன்று சிவராத்திரியை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நாடியாஞ்சலி தொடங்கி மறுநாள் அதிகாலை 5 மணி வரை நடைபெறும் மற்ற நாள்களில் தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை நாடியாஞ்சலி நடைபெறும்.