Arunachaleshwarar

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது.  தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு, ஆண், பெண் ஒன்று கூடினாலும் தீட்டு.
அப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே!   அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்கிறார்கள். தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.  இதுவல்ல உண்மையான தீட்டு.  இவை நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதற்காக,  இறைவனின் பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்க முறைகள்.
அப்படியானால், தீட்டு என்பது என்ன? அவை காமம்,குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!
1. காமத் தீட்டு:
காமம் என்பது ஆசை.  நாம் எந்தப்பொருள் மீதும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம்.   அதை அடைவதற்கு முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம்.  அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனதில் சந்தோசம் உண்டாகும், இல்லையென்றால் மனதில் சதா வேதனை ஏற்படும்.  இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.  இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
2. குரோதத் தீட்டு:
குரோதம் என்பது கோபம்.  யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன் பின் பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாக்குவதும் நேர்கின்றன.  சிலர் கோபத்தில் கொலை கூடச் செய்துவிட்டு ஆயுள் முழுவதும் துன்பம் அனுபவிப்பார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை.  கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர். கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. நம் ஆயுளும் குறைந்து விடுகிறது.  கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள்.  இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.  இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
3. லோபத் தீட்டு:
லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இறக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற  எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநலமே.  இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.  அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
4. மதத் தீட்டு:
மதம் என்பது கர்வம் (ஆணவம்). ஒருவரையும் மதிக்காத மமதையோடு இருக்கும் நிலை. எதையும் தான் ஒருவரால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற கர்வம் கொள்ளச் செய்யும்.  தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் உண்டு.  ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் உண்டு.  இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது.  இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
5. மாற்சரியத் தீட்டு:
மாற்சரியம் என்பது பொறாமை.  பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது, எந்த நேரமும் நாம் நல்லபடியாக இல்லையே என்று தன்னையே நொந்து கொள்வது, எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள் என்று எண்ணுவது, இவை அனைத்தும் மாற்சரியம். தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் என்பதே இவர்கள் எண்ணம்.  பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள்.  தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள்.  இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே என்கிறார்கள்.
இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள்.  இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது.  இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.  இறைவனோ நம் உள்ளத்திலேயே உறைந்திருக்கிறான்.
நம் உடலில் இருக்கும் சத்து போய்விட்டால், பிணம் தான்.  இதைத்தான் செத்துப் (சத்து)  போய்விட்டான் என்கிறார்கள். பிணம் ஆன பிறகு  ஒருவர் இறைவனை அடையமுடியாது. சிவலோகப் பதவி, வைகுண்டப் பதவி என்பதெல்லாம் உடலுக்கு இல்லை.  உயிர் பிரிந்த உடல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும்; உயிர் எங்கு சென்றது என்பது யாருக்குமே தெரியாது.
அறிவால் உயர்ந்து, அன்பால் தழைத்தால், அருள் நம்மை தானாகவே வந்தடையும்.