சென்னை:

காங்கிரஸ் தலைமையால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்று, அதிமுக ஆதரவு எம்எல்ஏவும், மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினருமான தமிமும் அன்சாரி தெரிவித்து உள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமும் அன்சாரி.

தற்போது அதிமுக பாஜகவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள அன்சாரி கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

தமிழகத்தின் எந்தவொரு  பிரச்சனைக்கும் பாரதிய ஜனதா அரசு தீர்வு காணவில்லை குறைந்த பட்ச உத்திரவாதம் கூட கொடுக்காத  பிஜேபியுடன் கூட்டணி சேருவது என்பது தற்கொலைக்கு சமம் என்று குற்றம் சாட்டி வரும் அன்சாரி, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் ஒருமுறைகூட தமிழகத்திற்கு வரவில்லை, அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அதிமுக பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டி வந்தார்.

இதற்கிடையில், அன்சாரி தனத எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் தகவல் பரவியது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அன்சாரி, தற்போதைய சூழ்நிலை யில், காங்கிரஸ் தலைமயிலான அணியினரால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்து உள்ளார்.