ss

 

தி.மு.கவைச் சேர்ந்த குன்னம் தொகுதி எம்.எம்.ஏ.வான எஸ். எஸ். சிவசங்கர், கட்சி அரசியலைத்தாண்டி பொது நோக்கோடு முகநூலில் பல பதிவுகளை எழுதி வருபவர்.

இன்று மாலை அவர் எழுதிய பதிவு ஒன்றில், “யாரும் இதில் பின்னூட்டங்கள் இட வேண்டாம். அரசியல் பேச வேண்டாம். உதவ நினைப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டுதல் தான் இது” என்ற குறிப்புடன்   கடலூர் மாவட்டத்திற்கு நிவாரணம் வழங்க செல்வோர் கவனத்திற்காக எழுதியிருக்கிறார்.

கடலூர் மாவட்டத்துக்கு நிவாரண உதவி செய்ய செல்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது. அந்த பதிவில் எஸ். எஸ். சிவசங்கர் கூறியிருப்பதாவது:

“கடலூர் நகரிலோ, கிராமங்களிலோ நிவாரணம் வழங்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அமைப்புகளுக்கு பல்வேறு சிக்கல்கள் முளைக்கின்றன.

நீங்கள் கொண்டு செல்லும் வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் என பேனர் கட்டாதீர்கள். மொத்தமாக கடத்தி சென்று விடுகிறார்கள்.

நேரே கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் செல்லுங்கள். அங்கே பதிவு செய்து கொள்ளுங்கள். எந்த கிராமத்திற்கு உதவி தேவை என்பதற்கு அங்கே விபரங்கள் உள்ளன.

விரும்பினால், அவர்களிடத்தில் ஒப்படைத்தும் வரலாம். இல்லை நேரே நீங்கள் உதவி வழங்க வேண்டும் என்று விரும்பினால், அங்கேயே பாதுகாப்பு கோரி பெறலாம்.

இந்த நடைமுறையை பின்பற்றினால், கஷ்டப்பட்டு கொண்டு செல்கிற பொருட்களை பாதிக்கப்பட்டவர்களிடம் சேர்க்கலாம்.”