ccl2xx
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்ட ஏப்ரல் 17-ல் நடக்கவுள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். அணிகளின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்களும் பங்கேற்கிறார்கள். போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 7 போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த 8 அணிகளில் 48 நடிகர்கள் பங்குபெறுகிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 6 பேர் இருப்பார்கள். 6 ஓவர்களுக்குப் போட்டி நடக்கும். ஏப்ரல் 17 அன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டி, இரவு 10 மணி வரை நடைபெறும்.
8 அணிகளின் கேப்டன்களாக சூர்யா, விஷால், கார்த்தி, ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, சிவ கார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த அணிகளின் தூதுவர்களாக நடிகைகள் இருப்பார்கள். இதற்காக நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, அமலா பால், ஹன்சிகா, காஜல் அகர்வால், ஸ்ரீதிவ்யா, வரலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
8 அணிகளின் பெயர்கள்: சென்னை சிங்கம்ஸ், மதுரை காலேஜ், திருச்சி டைகர்ஸ், கோவை கிங்ஸ், சேலம் சீட்டாஸ், தஞ்சை வாரியர்ஸ், நெல்லை டிராகன்ஸ், ராமநாடு ரைனோஸ்.
டிக்கெட் கட்டணம், சேடிலைட் உரிமம் என மொத்தம் ரூ. 13 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அணிகளின் அறிமுகக் கூட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.