சென்னை

சென்னை குரோம்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஒரு வாலிபர் மர்ம மரணம் அடைந்துள்ளார்.

 

சென்னையில் உள்ள கோட்டூர்புரம், மண்டபம் தெருவைச் சேர்ந்த ஜானகி ராமன். கார் டிரைவர் ஆவார்.  சுமார் 25 வயதாகும் இவர், அதிக குடிபோதைக்கு அடிமையாகி வீட்டில் தகராறு செய்து வந்தார். அவரை கடந்த 15-ந் தேதி குரோம்பேட்டை, அர்க்கீஸ்வரர் காலனியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

ஜானகிராமனுக்கு அங்கு மனநிலை மாற்றம் ஏற்பட்டதால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது. ஜானகிராமனின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வருமாறும், மறுவாழ்வு மையத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

ஜானகிராமனின் உறவினர்கள் நேற்று காலை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்றனர். அங்கு ஜானகிராமன் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போதை மறுவாழ்வு மையத்தின் மீது குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போதை மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த அந்தோணி பெலிக்ஸ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.