புதுச்சேரி

டும் பேருந்தில் ஜெர்மன் பெண்ணிடம் புதுச்சேரியில் பாலியல் அத்துமீறல் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜனாஸ்விங் என்பவர் திண்டிவனம் அருகே கோணமங்கலம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளையில் தங்கி தன்னார்வலராகச் சேவையாற்றி வருகிறார். கடந்த 7 ஆம் தேதி ஜனாஸ்விங் பெங்களூரூவில் உள்ள தனது தோழியைப் பார்ப்பதற்காகப் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார்.

அந்நேரம் அவரது பின் சீட்டில் இருந்த இளைஞர் ஜனாஸ்விங்கிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் அதிர்ச்சியடைந்த ஜனாஸ்விங் இது குறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் பாபுஜி,  துணை  ஆய்வாளர் சந்திர சேகர் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த இளைஞரை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது ஜெர்மன் நாட்டுப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் பெங்களூரைச் சேர்ந்த சரத்  என்பதும், அங்குள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ படித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

கடந்த 5 ஆம் தேதி ஹாக்கி வீரரான இவர், தனது தோழியுடன் புதுச்சேரிக்குச் சுற்றுலா வந்து விட்டு திரும்பச் சென்ற போது, பேருந்தில் தனக்கு முன் சீட்டில் பயணித்த ஜெர்மன் நாட்டு இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பெங்களூர் விரைந்த தனிப்படை போலீஸார் ஓசூர் பிரதானச்சாலை பவானி நகர் தனியார் பல்கலைக்கழகம் அருகில் இருந்த சரத்தை நேற்று கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் சரத்தை இன்று நீதிமன்றத்தில் முன்னிறுத்திய காவல்துறை காலாப்பட்டு மத்தியச் சிறையில் அடைத்தனர்.

குற்றம் நடந்தது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் இருக்கும் மாநிலம் ஆகிய 2 இடங்களுமே பாஜக ஆட்சி செய்யும் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.