டெல்லி: தவறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில், இன்று  உச்சநீதிமன்றத்தில்,  நேரில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்-ஐ கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதிகள், இவர்கள்  மன்னிப்பு கோரியது உதட்டளவிலானது என்று கூறியதுடன், இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள்  பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

முன்னதாக, பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம்  மார்ச் 19ந்தேதி அதிரடி  உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக இதுதொடர்பான  வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த உச்சநீதிமன்றம், பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.   ஆனால், பதஞ்சலி நிறுவனம் பதில் அளிக்கவில்லை.

இதுதொடர்பான அடுத்த விசாரணையின்போது,   உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்காததை கண்டித்த நீதிபதிகள், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையின்போது பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் ஏப்ரல் 2ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.

அதன்படி, இன்று  பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, மன்னிப்பு கோரினர்.

ஆனால்,  தவறான விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது என  நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில்,  ஆஜரான பாபா ராம்தேவ், நிறுவனத்தின் மீடியா பிரிவுதான் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர்; அதற்கு மன்னிப்பு கோரியுள்ளோம் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மீடியா பிரிவு நிறுவனத்தின் கீழ் இல்லாமல் தனியாக இயங்குகிறதா என்ன? என கேள்வி எழுப்பியவர்கள்,  எந்த அடிப்படையில் உங்கள் மருந்து பிற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? அறிவியல் ரீதியிலான நிரூபணம் உள்ளதா?. வழக்கு விசாரணையில் உள்ளபோது எவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த முடியும்?. நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது -மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும் ?,”என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்பு கேட்பதை எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பு என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்து விட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளையும் மீறிவிட்டு தற்போது மன்னிப்புக் கேட்டால் எப்படி ஏற்க முடியும்? மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யவில்லை? என கூறிய நீதிபதிகள்,  இதுதொடர்பாக பதஞ்சலி நிறுவன இணை நிறுவனர் பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குனர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்  புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம்  அளித்தனர்.

மேலும் இவர்கள்  மன்னிப்பு கோரியது உதட்டளவிலானது  என விமர்சித்த  உச்சநீதிமன்றம் ,  உச்சநீதிமன்றம் மட்டுமல்ல, நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அறிவுரை கூறினர்.