பெங்களூரு

மாணவர்களுக்காக இஸ்ரோ நடத்தவிருந்த இளம்விஞ்ஞானி திட்ட பயிற்சி முகாம் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டும் விதமாக சென்ற ஆண்டு முதல் இஸ்ரோ இளம்விஞ்ஞாணி பயிற்சி முகாமை நடத்தி வருகிறது.

மாநிலம் தோறும் 3 மாணவர்கள் என நாடு முழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இஸ்ரோவின் 4 மையங்களில் பயிற்சி முகாம் நடைபெறும்.

2020 ஆம் ஆண்டுக்கான இம்முகாம் அடுத்த மாதம் 11 முதல் 22 வரை நடைபெறவிருந்தது. கொரோனாத் தொற்றால் ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதையும் உறுதியாக கூறமுடியாத இச்சூழலில் பயிற்சி முகாமை ஒத்தி வைப்பதாகவும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.

இந்தாண்டு இப்பயிற்சி முகாமில் பங்கேற்க 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.