டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள், இந்நாள் எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியே தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதைப்போல முன்னாள் எம்.பி.க்கள் 2-ம்வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனது துணையுடனோ அல்லது முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனிமையிலோ இலவச பயணத்தை மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை மத்திய அரசு செலுத்தும்.  ரெயில்வேயின் கட்டணம் மற்றும் கணக்குகள் துறை இதற்கான ரசீதை மக்களவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கிறது.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மக்களவை செயலகத்துக்கு மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் கடிதம் அனுப்பினார். அதில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.க்கள் பயணம் செய்த வகையில் மத்திய அரசு செலவழித்த தொகை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு  மக்களவை செயலகம் பதில் அளித்து உள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் மேற்படி எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என பதில் அளித்து உள்ளது. அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள் எம்.பி.க்கள் பயணம் செய்த செலவு ரூ.26.92 கோடி எனவும், தற்போதைய எம்.பி.க்களின் பயண செலவு ரூ.35.21 கோடி எனவும் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2020-21-ம் ஆண்டில் இந்த செலவு முறையே ரூ.1.18 கோடி மற்றும் ரூ.1.29 கோடி எனவும் மக்களவை செயலகம் தெரிவித்து உள்ளது

இதை பார்க்கும்போது தற்போதைய எம்.பி.க்களின்  விமான பயண செலவு  எத்தனை கோடிகள்  இருக்கும் என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். மக்களின் பணம் இதுபோன்ற தேவையற்ற செலவுகளால் வீணடிக்கப்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும், அவர்களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் பல நூறு கோடிகள் மக்கள் பணம், மக்கள் நலப்பணிகளுக்கு செலவிடலாம்.