அயோத்தி,

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அயோத்தியில் வரும் 15 ஆம் தேதிக்குள் சர்வதேச விமான நிலையம் தயாராகும் என அறிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 22 ஆம் தேதி அன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு முன்பாக அயோத்தியில் உள்ள விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அயோத்தியில் சிறிய அளவில் விமான நிலையம் இருந்து வந்த நிலையில், அங்கு தற்போது பெரிய அளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று இந்த பணிகளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

யோகி ஆதித்யாநாத், செய்தியாளர்களிடம்,

”மாநில அரசு அயோத்தி விமான நிலையத்தை பெரிய அளவில் அமைப்பதற்காக 821 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது, இதை தொடர்ந்து, மிகப் பெரிய புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கானப் பணிகளை இந்திய விமான ஆணையரகம் மேற்கொண்டு வருகிறது. வரும் 15 ஆம் தேதிக்குள் புதிய விமான நிலையம்  தயாராகிவிடும்”

என அறிவித்துள்ளார்.