ண்டிகர்

நேற்று நடந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் 68% வாக்குகள் மற்றும் உத்தரப்பிரதேச 3ஆம் கட்ட தேர்தலில் 60.18% வாக்குகள் பதிவாகி உள்ளன.

தற்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட  மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.  நேற்று பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தன.  பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல்கள் நடந்தன.  உபி மாநிலத்தில் 7 கட்டங்களில் நேற்று 3ஆம் கட்ட தேர்தல் 59 தொகுதிகளுக்கு நடந்தது.

காலிஸ்தான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து நடக்கும் தேர்தல் என்பதால் பஞ்சாபில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 700 கம்பெனி துணை ராணுவமும், மாநில காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது.
நேற்று காலையில் இருந்தே வாக்குகள் அதிகளவில் பதிவாகின. நேற்று மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 68.33% சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதைப் போல, உத்தரப்பிரதேசத்தில், 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. உத்தரப் பிரதேசத்தில் 59 தொகுதிகளில் 60.18% வாக்குகள் பதிவாகின.  இந்த  5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த மாதம் 10ம் தேதி எண்ணி அன்றே முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.