புது டெல்லி:

போக்குவரத்தைத் தொடங்கத் தயாராக இருப்பதாக கூறி விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


 

கொரோனா பரவத் தொடங்கியதும் விமானப் போக்குவரத்துத் துறைதான் பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடும் விமான சேவையை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தத்தொடங்கின. அப்படி நிறுத்தப்பட்ட விமான சேவை, ஒன்றரை மாதங்களைக் கடந்தபின்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், உலக அளவில் 80% விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மீண்டும் விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளது. அதன்படி விமான நிறுவனங்கள் தங்கள் விமானத்தின் தயார் நிலை குறித்த விவரங்களை விமானப் போக்குவரத்து இயக்ககத்துக்கும், அமைச்சகத்துக்கும் அனுப்பியுள்ளன.

விமானப் போக்குவரத்து தொடங்கும்போது எண்பது வயதுக்கு மேற்பட்டோரைப் பயணிக்க அனுமதிக்கக் கூடாது என்றும், இருபது கிலோவுக்கும் குறைவான சுமையையே எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்ததை உறுதி செய்துகொள்ள விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.