அகமதாபாத்

இன்று முதல் 10 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி  தொடங்க உள்ளது.

கடந்த 1975 ஆம் ஆண்டு உலக்க கோப்பை கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டு 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பட்டத்தை வென்றது. இன்று இந்தியாவில் 13-வது உலக்க கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.

ஏற்கனவே  இந்தியாவில் 3 முறை உலகக் கோப்பை போட்டி நடந்தாலும் அவற்றை இந்தியா ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து தான் நடத்தியது. இப்போது  முதல் முறையாக இந்தியா தனியாக இந்த போட்டியை நடத்துவது தனித்துவம் வாய்ந்ததாகும்.

இந்தியாவின் 10 நகரங்களில் நவம்பர் 19 வரை அரங்கேறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறவில்லை.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதாவது ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 லீக்கில் மோதும். முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை. இதில் பல ஆட்டங்கள் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் குறைந்தது 6 வெற்றியாவது பெற வேண்டும்.

இன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.