பெங்களூரு
பெங்களூரு காவல்துறை ஆணையரிடம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கு குறித்து மகளிர் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை தனது 17 வயது மகளுடன் நேரில் சந்தித்து உதவி கேட்டபோது, தனது மகளை அவர் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
காவல்துறையினர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பிறகு இந்த வழக்கு சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்ததால் அவரை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை விசாரித்து எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. எடியூரப்பா மீது புகார் அளித்த 54 வயது பெண் மூச்சுதிணறல் காரணமாக கடந்த மே மாதம் மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த பெண் நுரையீரல் புற்றுநோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 27 அன்று எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் சி.ஐ.டி. காவல்துறையினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் மேலும் உடல்நலக்குறைவால் இறந்ததாக கூறப்பட்டாலும், புகார் அளித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு அமைப்புகள் குற்றச்சாட்டி வருகின்றனர். இதையொட்டி, புகார் அளித்த பெண்ணின் மரணம் குறித்து விரிவான அறிக்கை அளிக்க பெங்களூரு காவல் ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
[youtube-feed feed=1]