மும்பை: தன்னை பாலியல் வன்கொடுமை செய்தாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தனஞ்சய் முண்டே  மீது புகார் கொடுத்த மும்பை இளம்பெண், தற்போது, திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்,  தேசியவாத கட்சியைச் சேர்ந்த தனஞ்சய் முண்டே மீது, கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  புகார் கொடுத்திருந்தார்.  கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் கிடப்பில் போடப்பட்டது.

தனஞ்சய் முண்டே தற்போது,  மகாராஷ்டிர  மாநில சமூக நீதித்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.  இதுகுறித்து தகவல்  அறிந்த பாஜகவினர், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதற்கு பதில் கூறிய தனஞ்சய் முண்டே, தனக்கும் புகார் கூறிய இளம்பெண்ணுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்றதுடன், அந்த பெண்ணின் சகோதரியுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறினார்.

இந்த நிலையில், அந்தமும்பையைச் சேர்ந்த பெண் தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளது தெரிய வ்ந்துள்ளது. இதை அந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முண்டே மீதான புகாரைத் திரும்பப் பெறுவதாக அந்தப் பெண் எந்தக் காரணத்தையும் குறிப்பிடவில்லை என்று தெரிவித்த அவர், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு பெண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

ஆனால், இந்த விவகாரத்தில் அந்த இளம்பெண் அமைச்சரால் மிரட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.